Thursday, April 19, 2007

குரல்களின் அறிமுகம்

இது குரல்களின் பதிவு.
நிராகரிக்கப்பட்ட குரல்களின் பதிவு.
நசுக்கப்பட்ட குரல்வளைகளின் ஊடாய் ஒலிக்கும்
சங்கீதம்..

இந்தக் குரல்களில் தேனின் இனிமை இல்லாதிருக்கலாம்.
வெற்றியின் களிப்பை இந்தக் குரல்களில்
நீங்கள் காணமாட்டீர்கள்...!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒலிக்கும்
கீர்த்தனைகளுக்கெதிரான கலகக் குரல்கள் இது..
சந்தங்களைத் தேடும் நன்பர்களே
மன்னித்துக் கொள்ளுங்கள்...
இங்கே இடியோசை மட்டுமே கேட்கும்

வெட்கமாய் இருக்கிறது…!

வெட்கமாய் இருக்கிறது…!

அதோ தெரிகிறது விடியலின்
வெளிச்சம்
இருளின் கருமைக்குப் பழகிய
கண்கள்
கொஞ்சம் கூசத்தான் செய்கிறது…

புது உலகின் வாசல்
திறந்தே கிடக்கிறது
நரகலின் இளஞ்சூட்டில் இதம் கண்ட
கால்களோ நகர மறுக்கிறது…

திசை மாறிய புது உலகக் காற்று
ஒரு கணத்தில்
தலைமயிரைக் கலைத்துக் கடந்து போகிறது..
இது சுகந்தமா முடை நாற்றமா…?
குழம்புகிறது நாசி..
புது உலகை விரும்பும் ஒரு நான்
ஏளனமாய்ப் பார்க்கிறான்..
எனக்கு வெட்கமாய் இருக்கிறது

Sunday, April 1, 2007

விசும்பல்களின் காத்திருப்பு

நன்பனொருவன் சொன்னான் -
"தியானம் மௌனம் தரும்
மௌனம் மோட்சம் தரும்"

மௌனம் தேடிய என் நெடும் பயனம்
அன்றே தொடங்கியது
கண்களை மூடி அமர்ந்தேன்..
காதுகளில் இடியாய் இறங்கிய
சொட்டும் வியர்வையின் சப்தம்..
புயலின் ரீங்காரமாய் வீசிய
ஏக்கப் பெருமூச்சுகள்..
மனதைக் குடையும்
ஊமை விசும்பகள்...

காதுகளின் துவாரமெங்கும் சப்தங்கள்
ஈட்டியாய் துளைத்தது...
எனக்குப் புரிந்தது -
நான் தோற்று விட்டேன்!

மௌனத்தின் மேலான காதல்
தோற்ற பின் தான் தெரிந்தது
இது சப்தங்களின் உலகம் என்று..

இன்று வென்றவர்களின் சப்தங்கள்
அதிகாரத்தில்..
தோற்றவர்களோ காத்திருக்கிறார்கள்..

ஏக்கப் பெருமூச்சுகளும் ஊமை விசும்பல்களும்
காத்திருக்கின்றன..
தங்கள் தருனத்திற்காய்....